'Google Chrome'-யை விலை பேசும் தமிழ் பையன்; யார் இந்த அரவிந்த் ஶ்ரீனிவாஸ்?

Aravind Srinivas: 'Google Chrome'-யை விலை பேசும் தமிழ் பையன்; யார் இந்த அரவிந்த் ஶ்ரீனிவாஸ்?



மூன்றே ஆண்டுகளில் அசுர வளர்ச்சியைக் கண்டு, இப்போது கூகுள் குரோமை விலைக்கு வாங்க பேரம் பேசிக்கொண்டிருக்கிறார் இந்த தமிழ் பையன். ஏ.ஆர்.ரஹ்மான், கமல், பிரதமர் மோடி, சுந்தர் பிச்சை எனப் பலரும் சந்தித்திருக்கும் இந்த ஆரவிந்த ஶ்ரீனிவாஸ் யார்?
Published:13 Aug 2025 4 PMUpdated:13 Aug 2025 4 PM


சுந்தர் பிச்சை, ஆரவிந்த் ஶ்ரீனிவாஸ், ரஹ்மான்


இணையதள தேடுதலில் 'Mozilla Firefox, Microsoft Edge, Safari' எனப் பல 'Browser'கள் இருந்தாலும் பல ஆண்டுகளாக 3 பில்லயன் பயன்பாட்டாளர்களைக் கொண்டு முன்னணியில் கோலோச்சி வருகிறது கூகுள் குரோம் (Google Chrome). எந்தவொரு டெக் நிறுவனங்களாலும் அசைத்துப் பார்க்கமுடியாத உச்சத்தில் இருக்கும் இந்த கூகுள் குரோமை உருவாக்கியது தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட சுந்தர் பிச்சை.

2008ம் ஆண்டு கூகுள் இந்த குரோமை வெளியிட்டபோது உலகமே தமிழரான சுந்தர் பிச்சையைக் கண்டு வியந்தது. இப்போது அந்த கூகுள் குரோமை விலைக்கு வாங்க பேரம் பேசி டெக் உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் இன்னோரு தமிழர் அரவிந்த் ஶ்ரீனிவாஸ்.
Y

ஆரவிந்த் ஶ்ரீனிவாஸ்,


யார் இந்த அரவிந்த் ஶ்ரீனிவாஸ்?

அரவிந்த் ஶ்ரீனிவாஸ் (30), சென்னையில் பிறந்து வளர்ந்தவர். சென்னை ஐஐடியில்தான் எலெக்டரிகல் இன்ஜினியரிங்கில் B.Tech மற்றும் M.Tech படிப்புகளை முடித்திருக்கிறார். கம்ப்யூட்டர், மெஷின் லேர்னிங் படிப்பின் மேல்தான் அவருக்கு அதிகமாக கவனம். பாதை மாறினாலும் இலக்கு மாறக்கூடாது என எலெக்டரிகல் இன்ஜினியரிங் படித்திருந்தாலும், PhD ஆராய்ச்சிப் படிப்பை கம்ப்யூட்டர் சயின்ஸில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பண்ணியிருக்கிறார்.


எலெக்டரிகல் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் என வெவ்வேறாக படித்ததை சருக்கலாக எடுத்துக் கொள்ளாமல் அந்த இரண்டையும் கற்றது அவருக்கு மெஷின் லேர்னிங்கில் பெரும் பலத்தைக் கொடுத்தது. எலெக்டரிகல் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டிலும் சிறந்து விளங்கி, இரண்டு படிப்புகளின் ஆற்றலை ஒன்றிணைத்து செயற்கை நுண்ணறிவு ரோபோடிக்ஸ், மெஷின் லேர்னிங்கில் சாதனைகள் படைத்து வரும் பேராசிரியர் பீட்டர் அபீல்தான் அரவிந்த் ஶ்ரீனிவாஸுக்கு ஆராய்ச்சிப் படிப்புக்கான வழிகாட்டியாக இருந்திருக்கிறார். அங்கிருந்துதான் செயற்கை நுண்ணறிவையும், மெஷின் லேர்னிங்கையும் பயின்றிருக்கிறார் அரவிந்த் ஶ்ரீனிவாஸ். அதுதான் அவரது வாழ்வின் திருப்புமுனை.


சுந்தர் பிச்சை, ஆரவிந்த் ஶ்ரீனிவாஸ்,


சிறந்த கம்ப்யூட்டர் சயின்டிஸ்ட்டான அரவிந்த் ஶ்ரீனிவாஸ்

'Chat GPT' உருவாக்கும் முதலீட்டாளர்களில் ஒருவரான ஜான் ஷுல்மேன், அரவிந்த் ஶ்ரீனிவாஸின் திறமையை அடையாளம் கண்டு, 'OpenAI' நிறுவனத்தில் பணியாற்ற உதவுயிருக்கிறார். ஆராய்ச்சிப் படிப்புகளை முடித்தக் கையோடு, 'OpenAI' நிறுவனத்தில் பகுதிநேர பயிற்சியாளராக (Intern) பணிக்குச் சேருகிறார். பிறகு அங்கேயே முழுநேரம் பணியாற்ற வாய்ப்புக் கிடைக்கிறது.

அங்கு மெஷின் லேர்னிங் அல்கரிதம் உருவாக்கத்தில் பணியாற்றுகிறார். அந்த அனுபவத்தைக் கொண்டு கூகுளின் 'DeepMind' நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த துறையில் பணியாற்றுகிறார். அதைத்தொடர்ந்து கூகுளின் முக்கிய செயற்கை நுண்ணறிவு தொடர்பான புராஜெக்ட்டுகளில் பணியாற்றியிருக்கிறார். இதன் மூலம் சிறந்த கம்ப்யூட்டர் சயின்டிஸ்ட்டாக விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

சொந்தமாக தொடங்கப்பட்ட 'Perplexity AI' நிறுவனம்

பல முன்னணி நிறுவனங்களில் முக்கிய செயற்கை நுண்ணறிவுத் திட்டங்களில் சிறப்பான பணியைச் செய்த அரவிந்த் ஶ்ரீனிவாஸ், சொந்த நிறுவனம் தொடங்கி தனது திறமையை தனக்கான வளர்ச்சிக்காக மாற்ற முடிவு செய்து நண்பர்களுடன் சேர்ந்து 'Perplexity AI' நிறுவனத்தை 2022ம் ஆண்டு தொடங்குகிறார். 'Open AI' நிறுவனத்தின் 'Chat GPT'க்குப் போட்டியாக இந்த செயற்கை நுண்ணறிவு இணையதளத்தைத் வளர்த்து செயற்கை நுண்ணறிவு ரேஸில் இறக்கினார்.

மூன்றே ஆண்டுகளில் இப்போது பல மில்லியன் சந்தை மதிப்பில் உயர்ந்து முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களுக்குச் சவால் விடுகிறது அரவிந்த் ஶ்ரீனிவாஸின் 'Perplexity AI'. ஜெஃப் பெசோஸ், நாட் ப்ரைட்மேன், எலாட் கில், என்விடியா மற்றும் சூசன் வோஜ்சிக்கி உள்ளிட்ட முன்னணி நிறுவன முதலீட்டாளர்களின் முதலீட்டால் இப்போது அது கூகுள் குரோமையே விலைக்கு வாங்கும் அளவிற்கு வந்திருக்கிறது.


கமல், ஆரவிந்த் ஶ்ரீனிவாஸ், ரஹ்மான்

அரவிந்த் ஶ்ரீனிவாஸின் வளர்ச்சியைக் கண்டு பிரதமர் மோடி சமீபத்தில் அவரைச் சந்தித்து இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துவது குறித்து பேசியிருந்தார். இந்தச் சந்திப்பு டெக் உலகை திரும்பிப் பார்க்க வைத்து, ஆனந்த் ஶ்ரீனிவாசின் அசுர வளர்ச்சியையும் ஆச்சர்யத்துடன் திரும்பிப் பார்க்க வைத்தது.


ஏ.ஆர்.ரஹ்மான் செயற்கை நுண்ணறிவையும், இசையையும் ஒன்றிணைத்து வியக்க வைக்கும் இசை அனுபவத்தையும், காட்சி அனுபவத்தை உருவாக்கும் 'Secret 'Mountain' என்ற பெயரில் புராஜெக்ட் ஒன்றைச் செய்கிறார். அதுதொடர்பாக ஆனந்த் ஶ்ரீனிவாஸையும் சந்தித்திருக்கிறார். சினிமாவில் Ai பயன்படுத்துவதாக நடிகர் கமல்ஹாசனும் இவரைச் சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


உலகெங்கும் பெருமளவு பயன்பாட்டாளர்களைக் கொண்ட கூகுள் குரோமை தன்வசப்படுத்தினால், அரவிந்த் ஶ்ரீனிவாஸின் 'Perplexity AI' நிறுவனம் நிச்சயமாக செயற்கை நுண்ணறிவு உலகில் முன்னணி நிறுவனமாக கோலோச்ச வாய்ப்பிருக்கிறது. ஆனால், கூகுள் அதை விற்கத் தயாராகயில்லை என்பதும், அதை வாங்க டெக் நிறுவனங்களும், முதலீட்டாளர்களும் போட்டிப் போட்டுக் கொண்டிருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கூகுள், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட முன்னணி டெக் நிறுவனங்களில் இந்தியர்களை முக்கியப் பொறுப்புகளில் உட்கார வைக்க வேண்டாம், பணிக்கு எடுக்க வேண்டாம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அச்சுறுத்தும் இந்த வேளையில், டெக் உலகின் முன்னணி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளில், முக்கிய பொறுப்புகளில் இந்தியர்கள், தமிழர்கள் ஏற்கனேவே கால் பதித்து கோலோச்சத் தொடங்கிவிட்டனர். அரவிந்த் ஶ்ரீனிவாஸ் போன்ற திறமைக்க இளைஞர்கள் படைகள் எதிர்கால டெக் உலகை ஆள உருவாகிக் கொண்டிருக்கிறார்கள்.

Post a Comment

0 Comments